
முன்னுரை :
உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவனை உணர்ந்து ஓதிய மொழி தமிழ் மொழி. மேலும் இம் மொழியானது இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவுகளாகச் சிறந்து விளங்குகின்றது. இவற்றில் நடு நாயகமாக இருந்து மிகவும் சிறப்புற்று விளங்குவது இசைக் கலை ஆகும். இவற்றிலும் உட் பிரிவுகளாக குரலிசை, கருவியிசை, ஆடற் கலை எனப் பல பிரிவுகளாக இசைக் கலை விளங்கினாலும் பாடற் கலைக்கு அதாவது குரலிசைக்குச் சிறப்பிடம் அளிக்கப் படுகின்றது. இவற்றில் மொழி அடிப்படையில் தமிழ் மொழியின் தனி அடையாளமாக விளங்குவது பண் இசை ஆகும். தமிழ்ப் பண்கள் மிகவும் பழமை வாய்ந்தது மட்டுமல்லாமல் காலத்தால் முற்பட்டதாகவும் விளங்குகின்றது. இவ்வாறு சிறப்பு பெற்ற தமிழ் பண்ணிசையினை காரைக்கால் அம்மையார் கையாண்டருளி பண்ணிசை வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களித்துள்ளார் என்பதை அறிவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ் பண்ணிசை
தமிழ் பண்ணிசையானது மிகப் பழமையானது என்பதை பெருங்குருகு, முது குருகு, சிறு நாரை, பெருநாரை, கூத்த நூல் போன்ற இசை நாடக நூல்கள் மூலமாகவும் அறியலாம். மேலும் இசையும் இசை இலக்கணமும் தமிழரிடையே இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வளர்ந்தது. உலகின் ஆதி இசை தமிழ் பண்ணிசையே என ஆராய்ச்சி செய்து அறிஞர்கள் பலர் தக்க ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர். சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்திற்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்தில் இசையைப் பற்றிய குறிப்பாக “அளபிறந்து உயிர் தரும் ஒற்றிசை நீட்டலும் உளவன மொழிப இசையொடு சிவனிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்ற வரிகள் நம் பண்ணிசையின் தொன்மையை நன்கு விளக்குகின்றது. அது மட்டுமல்லாமல் பாடும் பாடற் கலைஞரின் உடல் அசைவுகள் எப்படி இருக்க வேண்டும் எனும் விதி நெறிமுறை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியில் கருங்கொடி புருவம் ஏறா கயல் நெடுங் கண்ணும் ஆடா, அருங்கடி மிடரும் விம்மா, தனமணி நீரும் தோன்றா என்ற குறிப்புகள் நம் பண்ணிசை வளர்ந்த முறைமையினை எடுத்து இயம்புகின்றது. மேலும் பத்ம புராணம் என்னும் வடமொழி நூல் தமிழ் பண்ணிசை ஆனது காவிரிக்கரையில் பிறந்து வளர்ந்து நடமாடி மெல்ல மெல்ல வடக்குத் திசை சென்று மராட்டியத்தில் இடம் பெற்று வளமாகி பாரதம் முழுவதும் பரவியது எனவும் இதுபோலவே மற்றொரு வடமொழி நூலாகிய பாகவதம் தமிழ் பண்ணிசையானது பொதிகை மலைச் சாரலாக வருகின்ற தாமிர பரணி ஆற்றங்கரையில் எழுந்து காவிரிக் கரையில் நடமாடி மெல்ல வடக்கே சென்று பாரதம் முழுவதும் பரவியது என்கின்றது. இக் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்தியாவின் தலை சிறந்த சட்ட மேதை மனித குலச் செம்மல் திரு. டாக்டர். அம்பேத்கர் அவர்கள் இந்தியா முழுவதும் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் என்று ஆராய்ச்சி செய்து அடையாளப்படுத்தியுள்ளார்கள். இக் கருத்தைச் சிந்திக்கும் போது நாட்டு மக்கள் அனைவராலும் பேசப்பட்ட மொழி தமிழ் எனவே அவர்கள் வளர்த்த இசை தமிழ் பண்ணிசையே என்பதை அறியலாம்.
காரைக்கால் அம்மையார் :
சோழ நாட்டின் துறைமுக நகரான காரைக்காலில் வணிகன் தனதத்தனின் மகள் புனிதவதியார். இவர் தம் கணவர் பரமதத்தர். இவர்களின் திருமண வாழ்வில் நடந்த இறைவனின் திருவிளையாடலால் இறைவனையே வேண்டி பேய் உருவம் பெற்றதாக வரலாறு கூறும். இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து காரைக்கால் அம்மையார் பெயர் பெற்ற இவர் அதன் பின் பண்ணார்ந்த தமிழ் பாடல்களால் இறைவனை பாடிப் போற்றும் திருநெறிய தமிழ் நெறியை முதன் முதல் தோற்றுவித்த அருளாசிரியர் ஆவர். இவர் அருளியவற்றில் நமக்குக் கிடைத்தவை
1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் – 2
2. திரு இரட்டை மணி மாலை
3. அற்புத திருவந்தாதி.
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்
இப் பதிகங்கள் ஒவ்வொன்றும் பதினொரு பாடல்களைக் கொண்டது. பதினொராம் திருப்பாடல் பதிகத்தைப் பாடியோர் பெயரும் இவற்றைப் பாடும் அடியார்கள் பெறும் பயனும் கூறும் திருக்கடைக் காப்புச் செய்யுளாகும். இப் பாடல் நீங்க ஒவ்வொரு திருப்பதிகத்திலும் பத்துப் பாடல்கள் உள்ளன. பத்துப் பாடல்களால் இயன்றவற்றை பதிகம் என்ற பெயரால் வழங்குதல் அம்மையார் காலத்துத் தோன்றி நிலை பெற்றிருக்கலாம். எனத் தோன்றுகின்றது. பின்னே தேவார மூவர் பதிகம் பாடிப் பரவுவதற்கு அம்மையார் பதிகங்களே வழிகாட்டி. இவை காலத்தால் மூத்தவை என்பதால் மூத்த திருப்பதிகங்கள் எனப் பெயர் பெற்றன. முதல் பதிகம் நைவளம் என்ற நட்ட பாடைப் பண்ணிலும், இரண்டாம் பதிகம் இந்தளம் என்ற பண்ணிலும் பாடப் பெற்றுள்ளன. முதற் பதிகம் அமைந்த நட்டபாடைப் பண்ணில் திருஞான சம்பந்தரின் முதல் பதிகமான தோடுடைய செவியன் பதிகமும் இரண்டாம் பதிகம் அமைந்த இந்தளப் பண்ணில் திருஞான சம்பந்தரின் இரண்டாம் திருமுறை பதிகம் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்
திரு இரட்டை மணி மாலை
கட்டளை கலித்துறை முன்னும் வெண்பா பின்புமாக முறையே தொடர்ந்து அந்தாதித் தொடையால் மாலை போன்று அமைய இருபது செய்யுட்களால் இயற்றப்பெற்றது இரட்டை மணி மாலை என்ற பிரபந்தமாகும். இம் முறைமையில் முதன் முதல் பாடியவர் அம்மையாரே ஆவார். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூலில் கட்டளை கலித்துறை என்னும் யாப்புக்கு மூல இலக்கியமாக விளங்குவன இந் நூலில் அமைந்துள்ள பாடல்களே ஆகும்.
அற்புதத் திருவந்தாதி :
இறைவன் அருளால் வானமும் மண்ணுமெல்லாம் வணங்கு பேய் வடிவம் பெற்ற அம்மையார் முதன் முதல் திருவாய் மலர்ந்தருளிய சிறப்பினது இது. அற்புதம் என்பது ஈண்டு யாவராலும் வியந்து போற்றுதற்குரிய சிவ ஞானம் என்னும் பொருளைத் தருவதாகும். இறைவன் அருளால் தம் உள்ளத்து தோன்றிய சிவ ஞானத்தின் ஒருமைப் பாட்டினால் இறைவனை பாடிப் போற்றிய அந்தாதி ஆதலின் இப் பெயர் பெற்றது. சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப் பத்தில் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய நான்காம் பத்து அந்தாதித் தொடை அமைய பாடப் பெற்றதாயினும் முதற் பாட்டின் முதற் சொல் இறுதிப் பாட்டின் இறுதிச் சொல்லாக அமையும் மண்டலத்தில் முறை இல்லை. அந்தாதித் தொடை அமைய நூற்றொரு வெண்பாக்களால் இறுதியும் முதலும் மண்டலத்து முடியும் அற்புதத் திருவந்தாதியே அந்தாதி இலக்கியத்துள் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த விருந்து நூல் என்பது அறிஞர் துணிபாகும்.
முடிவுரை :
இவ்வாறாக பண்ணிசை வளர்ச்சிக்கு முதலில் வித்திட்ட பெருந்தகை காரைக்கால் அம்மையார் என்றே கூறலாம். இவர் ஏற்படுத்திய வழியில் தேவார மூவரும் இன்னும் பல அருளாளர்களும் தோன்றி தமிழ் பண்ணிசையினை பாரெலாம் பரவச் செய்ய அருந்தொண்டு புரிந்தனர். இவர்கள் அனைவருக்கும் முன் தோன்றி இசைத்தமிழ் முன்னோடியாகத் திகழ்ந்து தமிழ் பண்ணிசையினை அருளி தமிழ் பண்ணிசை வளர்ச்சிக்கு வித்திட்ட பெண் என்ற சிறப்புப் பெற்ற காரைக்கால் அம்மையார் திருவடிகளை மலர் தூவி வழிபடுவோமாக !
முனைவர். சோ. சிவகெளரி,
கெளரவ பேராசிரியர்,
இசைத்துறை, மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்.
Leave a Reply