இலக்கியங்களில் இசைப்பண் – முனைவர் தி.சங்கரநாராயணன்

ஆய்வுச்சுருக்கம்

கலை என்பது மனித இனத்திற்கான அழகியல் உணர்வாகும். இக்கலை உணர்வு, உள்ளத்தால் உணர்ந்து உருவாக்கப்படுவது. உணர்வுகளுடன் கூடிய கற்பனை உணர்வே கலையாகப் பிறக்கிறது. மனிதனுள் தோன்றும் கலைப் படைப்புத்திறனே சமூகத்தின் பண்பாடாகவும் உருப்பெறுகிறது. மக்களின் வாழ்வை வளப்படுத்தியவைகளில் ஒன்று கலைச்செல்வம் ஆகும். அக்கலைச்செல்வங்கள் சங்க கால மக்களின் வாழ்வோடு தொடர்புடையதாய் இருந்தது. மனித மனத்தில் உதித்த கலைத்திறனே இசைக்கலையாக, கட்டிடக்கலையாக, ஓவியக்கலையாக, சிற்பக்கலையாக உருப்பெற்றது. இவ்வாறு கால வளர்ச்சியில் கலைகளும் படிப்படியாக வளர்ந்ததோடு, மனிதப்பண்பாட்டையும் வளரச்செய்தது. இப்பின்னணியில் சங்க காலத்தில் இசைக்கலையும், அக்கலையானது அவர்தம் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

முன்னுரை

கலை என்பது பண்பாட்டின் முக்கிய கூறுகளில் ஒன்று. கலை என்பது அழகின் கூறுகளை உள்ளடக்கியது. நடனக்கலை, இசைக்கலை, கட்டிடக்கலை, ஓவியக்கலை என ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர். கலையின் அடிப்படையான ஒன்று உணர்வு. கலை என்னும் சொல் கல் என்னும் சொல்லின் அடிப்படையில தோன்றியதாகும். கலைகள் மனிதன் மனதிற்கு இன்பத்தையும், மனநிறைவையும் அளிக்கின்றன. அக்கலைகளைக் கண்ணால் கண்டும், காதினால் கேட்டும் உணர்ந்து மகிழமுடிகிறது. கலைகளின் அடிப்படைத் தன்மை ஒன்றாக இருந்த போதிலும், அந்தந்த நாட்டின் இயற்கை அமைப்பு, சுற்றுப்புறச்சூழல், பழக்கவழக்கங்கள், சமயம் முதலியவற்றிற்கேற்ப கலை வளர்ச்சி அடைந்தது. தொடக்க காலத்தில்  மனிதன் காடுகளில் வாழ்ந்து வந்த காலத்திலேயே பண்பாடு தோன்றிவிட்டது. முதலில் இலைதழைகளை அழகிய ஆடையாக உடுத்திக் கொண்டான்.   தன்னுடைய கருத்துக்களைப் பிறருக்குத் தெரிவிக்க ஓவியங்களை வரைந்தான்.  இரும்பு மற்றும் கற்களால் செய்யும் கருவிகளைக் கூட கலை நயத்தோடு உருவாக்கினான்.  இவ்வாறு கலையானது  படிப்படியாக வளர்ச்சியடைந்தது.  இக்கலைகள் மக்களின் பண்பாட்டையும் வளர்த்தன. கலையினைப் பற்றி குறிப்பிடும்பொழுது, “ஐம்புல உணர்வுகளால் தான் பெற்றவை கொண்டு மனம் ஒன்றைப் படைத்து வெளியிடுகின்றபோது அது கலைப்படைப்பாக மிளிர்கின்றது.  ஆகவே கலை என்பது படைப்புத்திறனை உள்ளடக்கிய ஒன்றாகும்”1என்கிறார் க.அ. ஜோதிராணி. கலைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் நாகரிகம், பண்பாட்டினை அறிந்து கொள்ளத் துணைபுரியும் கூறாகும்.  மக்கள் தம் மனதை அமைதியாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கக் கலைகள் உதவுகின்றன.  கலை மக்களுக்கு இன்பம் பயக்கும் கருவியாகவும், இன்ப துன்பங்களை நீக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.

கலைவிளக்கம்

          மனிதன் தன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி சிந்தனைகளை வெளிப்படுத்தி தன்னுடைய படைப்பாற்றலை கலைகளாக வளர்த்துள்ளான். கலைகள் மனிதர்களின் உள்ளத்தோடு தொடர்புடையவை. “கலை என்பது மனிதனின் உள்ளத்தைத் தன் வயமாக்கி நிரப்பி, அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படுத்தும் ஆற்றல் என்று குறிப்பிடுவது கலைக்குச் சிறந்த விளக்கமாக அமைகிறது.2 என்று மா.இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். மேற்கண்ட கருத்துக்களிலிருந்து மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனையும் அவனிடம் காணப்பட்ட அழகியல் உணர்வும் சிந்தனை வெளிப்பாடுமே கலைவடிவமாகவும், கலை வகைகளாகவும் தோற்றம் பெற்றன. அழகுணர்வு கொண்ட மனிதனால் மட்டும் கலைகளை உருவாக்கமுடியும். நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்துவனாகக் கலைகள் விளங்கியுள்ளதை  இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

இசைக்கலை

          இசை என்பது அற்புதமான உணர்வுப்பூர்வமான உணர்வுகளில் ஒன்று. நம் மனம் இன்ப துன்பவுணர்வுக்கு ஆட்படும்போது நம் உணர்வினை வெளிப்படுத்தும் கருவியாக இசை விளங்குகிறது. மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் இசை வாழ்வின் ஓர் அங்கமாக விளக்ககிறது.  மக்களின் இன்ப துன்ப உணர்வுகளுக்கு அடிப்படையாய் அமைவது இசை.  சங்ககால மக்கள் தோற்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக்கருவிகள், மிடற்றுக்கருவிகள் என இசைக்கருவிகளை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர். இசைக்கலையின் வழியாக  மக்கள் தம் வணங்கும் தெய்வத்திற்கும் தனக்கும் இடையே பாலத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

                     விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகளைக் கேட்ட மனிதன் அது போல ஒலியினை எழுப்பினான். அவ்வொலிகளை முறைப்படுத்திய பொழுது இசை தோன்றியது.  “இசைப்பு இசையாகும்” என்கிறது தொல்காப்பியம் (தொல்.சொல். நூ.310) “அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப, இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்;” (தொல்.எழு. 310) என்ற தொல்காப்பிய நூற்பாவால் இசை நூல்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இசையின் தோற்றத்தைப்பற்றி, “மக்கள் நாகரிக உணர்ச்சி பெற்ற காலம் முதலே இசை இந்நாட்டில் இடம் பெற்றுள்ளது எனக் கூறலாம்.  இவ்விசையானது செவிக்கு இன்பம் ஊட்டும் அளவில் நிற்காமல் உள்ளத்தைப் பண்படுத்திப் பேரின்பப் பேற்றையும் தரவல்லது என்பதனை நம் முன்னோர்கள் வரலாற்றால் அறியலாம்”2என்கிறது மதுரை தமிழ்ப்பேரகராதி. இதிலிருந்து இசை என்பது மனிதன் தோன்றிய காலம் முதல் இருந்துள்ளது. மனிதனின் உள்ளத்தைப் பண்படுத்தும் கருவியாகவும் இசை இருந்துள்ளதை அறியமுடிகிறது. இசை என்பதற்கு,“இசைப் பாட்டு, இசைப்பு, இசைனேவல், இணக்கம், இனிய ஒலி, ஐக்கியம், கொடை, சங்கீதம், சொல், பண்பு, பாட்டிசை, புகழ், பொன் முத்தமிழனொன்று உரை, மிடற்றுப்பாடல், பொருத்துவாய்”3 என்று  பொருள் தருகிறது தமிழ்ப்பேரகராதி. இசை உணர்வுகளோடு தொடர்புடையது என்பதை,“சிறப்பு மிகுந்த கவின் கலைகளுள் ஒன்றாக இசை விளங்குகிறது.  “இசை” என்ற சொல்லை உச்சரிக்கின்றபோது ஏற்படுகின்ற உணர்வு உயிர்த் துடிப்புடையது”4 என்கிறார் மாலதி.  இசை என்பது கலைகளுள் ஒன்றாகவும், மனித உணர்விற்கு அடிப்படையானது என்பதையும் எடுத்துரைக்கிறது. இசையானது இரு வகைப்படும் அவை  முறையே செவ்வியல் இசை 2, நாட்டுப் புற இசை ஆகும்.  இசை தோன்றும் தன்மையினைப் பற்றி, “இசை அகத்திலிருந்து எழும் உணர்ச்சிகளிலிருந்து தோற்றம் பெறுகிறது.  இவ்வாறு அகத்திலிருந்து தோன்றுவதால் உடலுக்குச் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது”5என்று தமிழ்க்களஞ்சியம் குறிப்பிடுகிறது. இசை பற்றிய செய்திகளைக் கூறும் இசை நூல்களும் இருந்துள்ளன.  சங்க காலத்தில் முதுநாரை, முதுகுருகு என்னும் இசை நூல்கள் இருந்தன. பின் பரதசேனாதியம் இசைத் தமிழ், பதினாறுபடலம், களரியாவிரை, தாளசமுத்திரம், கச்சபுட வெண்பா, தாள வகையோத்து என்னும் நூல்களும் தோன்றின.பஞ்ச மரபு என்னும் இசைநூல் அறிவனரால் இயற்றப்பட்டது.  இந்நூலில் இசை, முழவு, தாளம், கூத்து, அவிநயம் என்ற ஐந்தின் மரபுகள் இருந்தன.

          அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், இசை நுணுக்கம், இந்திரகாளியம் ஆகிய நூல்களை எடுத்துக்காட்டுகின்றார்.  மேலும் இசையின் ஒலித்தன்மைப் பற்றிக் குறிப்பிடுகையில்,“ஏழிசைகளும், ஏழு விலங்குகளின் குரல் போன்று இருக்கும்”என அறிவனார் பஞ்ச மரபில் குறிப்பிடுகிறார்.குரல் – சங்குதுத்தம் – குயில் கைக்கிளை – யானைஉழை – மயில்இளி – புரவிவிளரி – அன்னம்தாரம் – காடை என்று ஏழு விலங்கினங்களோடு இசையை ஒப்பிட்டுக் கூறுகின்றனர். இவற்றிலிருந்து இசை மனிதவாழ்வில் ஒன்றாகி, உள்ளத்தோடு, உணர்வோடு, இசைப் பொருந்தியுள்ளது. பல்வேறு வகையான இசைநூல்கள் இருந்துள்ளதையும், அவற்றின் வழியாக இசைபற்றிய விளக்கத்தினையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

 பண்

           பண் என்பது இசையோடு நெருங்கிய தொடர்புடையது. இனிமையான இசையைத் தருவது பண்.  ஒலி உருவ அமைப்பு என்று அழைக்கப்படுவது பண். இத்தகைய பண் பற்றி, “பாவோடு இணைதல் இசை என்றார் பண்ணென்றார் மேவார் பெருதான எட்டாலும் பாவாய் எடுத்தல் முதலா இருநான்கும் பண்ணப் படுத்தமையால் பண் என்று பார்” (பஞ்ச.மரபு.வெண்பா. 50) என்ற பாடல் அடிகள்  குறிப்பிடுகின்றன. பாடலின் பொருள் அசை, சீர் அளவோடு பொருந்தி எட்டு வகை மெய்ப்பாடுகளுக்கேற்பப் பண்கள் பொருந்தியிருக்க வேண்டும். இசைக்குரிய நரம்புகளாக குரல், துத்தம், கைக்கிளை, உழை, விளரி, தாரம் என்னும் ஏழு நரம்புகளைப் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, நிலங்களில் காலை, மாலைப் பொழுதுகளில் பண்கள்  வாசிக்கும் வழக்கம் இருந்துள்ளன.பெரும்பண்களாகக் குறிஞ்சிக்குக் குறிஞ்சிப்பண், முல்லைக்குக் சாதாரிப்பண், மருதத்திற்கு மருதப்பண், பாலைக்குப் பஞ்சுரப்பண் இருந்தன என்பதை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

                     சங்க இலக்கியத்தில் பரிபாடல் பண்ணோடு பாடப்பட்டுள்ளது.  இவற்றில் உள்ள 24 பாடல்களில் 22 பாடல்கள் பண்களோடு 11 பாடல்கள் பாலை என்னும் பண்ணிலும், ஐந்து பாடல்கள் நோதிறம் என்னும் பண்ணிலும், ஐந்து பாடல்கள் காந்தாரம் என்னும் பண்ணிலும் பாடப்பட்டுள்ளன.

குறிஞ்சிப்பண்

                     குறிஞ்சிப்பண் மலைகளில் வாழ்ந்த மக்கள் பாடும் இசை. இப்பண் தெய்வங்கள் மற்றும் மக்களை மகிழ்விக்கும் கருவியாக இருந்துள்ளது.இரவில் ஊர்க்காவல் புரியும்போது குறிஞ்சிப்பண்ணானது பாடப்பட்டுள்ளது.  மகளிர் தங்களின் இன்பத்தைத் தெரிவிக்கக் குறிஞ்சிப் பண்ணைப் பாடியுள்ளனர் என்பதை,“மகளிர்  யாமநல்யாழ்; நாப்பணின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப்” (ம.கா. 583-585) என்று மதுரைக்காஞ்சியின் அடிகள் குறிப்பிடுகின்றன.  இசையின் ஓசைக்கேட்டு விலங்கினங்களும் மயங்கியதை அகநானூற்றில், “ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்” (அகம். 102) என்ற பாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன. குறிஞ்சி நிலப்பெண் பாடிய குறிஞ்சிப் பண்ணைக் கேட்டு தன் உள்ளத்தைப் பறிக்கொடுத்த யானை, தின்று கொண்டிருந்தத் தினைக்கதிரை உண்ணாமல் நின்றதை புலப்படுத்துகிறது.

 மருதப்பண்

                     சங்க காலத்தில் காலைப்பொழுதில் பாடப்படும் பண் மருதப்பண்.  வைகை ஆற்றில் பாணர்கள் மருதப்பண்ணைப்பாடியதைப் பரிபாடல் எடுத்துரைக்கிறது.  பாணர்கள் மருதப்பண்ணைப் பாடும் நிகழ்வினை, “சீரினது கொண்டு நரம்பனி தியக்கி யாழோர் மருதம் பண்ணக் காழோர்” (ம.கா. 657-656) என்ற பாடல் அடிகள் கூறுகின்றன. மருதப்பண் பாடப்படும் நேரம் குறித்து மதுரைக்காஞ்சி விளக்குகிறது.

ஆம்பற்பண்

                     ஆம்பற்பண் என்பது இரங்கற் ஓசையில் பாடப்படும் பண். இப்பண் மக்களின் துன்பங்களை வெளிப்படுத்தும் விதமாக இருந்துள்ளது.  சங்க காலத்தில் ஆநிரைகளை ஓட்டி வீடு திரும்புவதற்கு ஆம்பற்பண்ணின் இரங்கற் இசையானது ஒலிக்கப்பட்டுள்ளது.  இப்பண்ணினைப் பற்றி நற்றிணையில்,“பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பலங் குழலின் ஏங்கிக்” (நற். 113) என்ற பாடல் அடிகள் செப்புகின்றன.  தலைவி தன் துன்பத்தின் காரணமாக வாய்விட்டு அழுவது,ஆம்பற்பண்ணில் புல்லாங்குழல் ஒலியெழுப்புவது போல் இருந்துள்ளதை உணர்த்துகின்றது.

படுமலைப்பண்

                     படுமலைப்பண் என்பது பாலை நிலத்தில் பாடப்படும் பண்.  இப்பண் சிறிய யாழினைக் கொண்டு வாசிக்கப்படுகிறது.  இதனை,“படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு எழீஇ அன்ன உறையினை முழவின்” (நற். 139) என்ற  நற்றிணை பாடல் அடிகள் குறிப்பிடுகிறது. படுமலைப் பண்ணின் ஒலியானது, மழை பெய்கின்ற பொழுது எழும் ஒலியைப் போன்று உள்ளதை வெளிப்படுத்துகின்றன.

நட்டராகம்

                     நைவளம் என்பது நட்டராகம் என்னும் பண்ணைக் குறிக்கும்;.  இப்பண்ணானது பாலை யாழில் வாசிக்கப்பட்டதை, “நைவளம் பூத்த நரம்பியை சீர்ப்பொய்வளம் பூத்தன பாணாநின் பாட்டு” (பரி.18-20-4) என்னும் பாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன. நைவளப் பண்ணை,பாலையாழின் முறையறிந்து பாணர்கள் வாசித்தனர்.

முடிவுரை

மேற்கண்ட கருத்துக்களிலிருந்து சங்ககாலத்தில் இனிமையாக இசையினைபண் என்றழைத்தனர்.  மக்கள் காலை, மாலை, பகல், இரவு நேரங்களில் பண்களைப் பாடி மகிழ்ந்துள்ளனர். நிலங்களின் அடிப்படையில் குறிஞ்சிப்பண், மருதப்பண், நைளவப்பண் ஆகிய பண்கள் இசைத்தச் செய்தியைப் பற்றி இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. குறிஞ்சிப் பண்ணானது இரவு நேரங்களில் காவல் புரிவதற்கும், மருதப்பண் விடியற்காலையில் பாடப்படுவதும், ஆம்பற்பண் இரங்கலின் வெளிப்பாடாக இருந்ததை இலக்கியவரிகளின் வழியாக தெரிந்து கொள்ளமுடிகின்றது.

மேற்கோள்

  1. க.அ.ஜோதிராணி, சங்க இலக்கிய சமூக ஆய்வுகள் ப.74-77
  2. க.பொன்னையாபிள்ளை, மதுரைத் தமிழ்பேரகராதி, ப.20
  3. மேலது பக் 121
  4. பி.மாலதி, சேனாவரையர் காட்டும் இசைக்கறிப்பகள் தமிழிசை ஆய்வு மாலை ப.130
  5. தமிழ்க்களஞ்சியம் தொகுதி – 2 ப.340

முனைவர்தி.சங்கரநாராயணன்

உதவிப்பேராசிரியர், வீணைத்துறை

ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி, மதுரை – 02

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*