கொடுகொட்டியும் கொட்டிச்சேதமும் – முனைவர் ஆ.பத்மாவதி

கொடுகொட்டியும் கொட்டிச்சேதமும்.

சிலப்பதிகாரத்தின் கடலாடு காதையில் இறவன் ஆடிய கொடுகொட்டி முதலிய பதினோரு ஆடல்கள் பற்றியயதகவல்கள் உள்ளன. கொடுகொட்டி ஆடிஅது பற்றிக் கூறுகின்ற போது,

சீரியல் பொலிய நீரல நீங்கப்
பாரதி யாடிய பாரதி யரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பேவல் கேட்ப
உமையவளொருதிறனாக வோங்கிய
இமையவனாடிய கொடுகொட்டி யாடலும்  [38 – 46]

இந்த கொடுகொட்டி ஆடுகின்றபோது ஒலித்த இசைபற்றியும் இங்கு கூறப்பட்டிருக்கிறது. முதல்வரிதான் அது.

சீரியல் பொலிய – தாளங்கள் சிறப்பாக விளங்க அத்தாளங்கள் சீர், சீர்களால் அமைந்த தூக்கு, அந்த தூக்கு ஒருமுறையில் சுற்றி சுற்றி ஒலிக்கும்போது அமைகின்ற பாணி ஆகியன சிறப்பாக அமைந்திருந்தன.

நீரல நீங்க – தேவையில்லாத தாளக்கூறுகள் நீங்கும்படியான வகையில் தாளங்கள் சுத்தமாக ஒலித்தன. அவதாளங்கள் நீங்கும்படி  என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலிலும் இறைவன் ஆடிய கொடுகொட்டியாடலைக் கூறி விளக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

      படுபறை பலவியம்ப பல்லுருவம் பெயர்த்து நீ

      கொடுகொட்டி ஆடுங்கால் ….

                  .. கொண்ட சீர் தருவாளோ..

என பறையின் தாளவிசைக்கேற்ப ஆடியதைக் குறிப்பிடுகின்றது.

சிலப்பதிகார அரங்கேற்றுகாதையில் ஆடலாசிரியன் அமைதி பற்றிக் கூறும்போது,

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு
ஆடலும் பாடலும் பாணியுந் தூக்குங்
கூடிய நெறியின கொளுத்துங் காலை  (3:12-17)

இவ்வரிகளின் உரை

“அல்லியம் முதலாகக் கொடுகொட்டி ஈறாகக் கிடந்த பதினோரு கூத்துகளும் அக்கூக்களுக்குறிய பாடல்களும் அவறுக்கு இசைத்த வாச்சியக் கூறுகளும் நூல்களின் வழியே தெரிய வறிந்து, அக்கூத்தும் பாட்டும் தாளங்களும் தாளங்களின் வழியே வந்த தூக்குகளும், தம்மிற் கூடி நிகழுமிடத்து….”

என்றதனால் கொடுகொட்டி என்பது தாளத்திற்கு மட்டும் ஆடும் நிருத்தம் என்பது தெரிய வருகிறது. மேற்கூறிய ஆடலாசிரியன் அமைதி பற்றிய வரிகளில் இரண்டாவது வரியக் கவனித்தால்,

“பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்ந்து”

என்கிறது. பலவகைக் கூத்து என்பது, “அல்லியம் முதலாகக் கொடுகொட்டி ஈறாகக் கிடந்த பதினோரு கூத்துகள்” – ஆதலால், இக்கூத்துகள் அவற்றிற்குரிய விலக்கு உறுப்புகளோடு புணர்த்து ஆடப்படுவது மரபு. அவ்வாறு கொடுகொட்டியாடல் விலக்குறுப்புகளோடு ஆடப்பட்ட கூத்தே “கொட்டிச் சேதம்” ஆகும்.

      கொடுகொட்டி ஆட்டத்தின்போது “உமையவள் ஒரு திறனாக” என்று கூறப்பட்டிருப்பது போலவே, கொட்டிச்சேதத்திலும் ““உமையவள் ஒரு திறனாக” என்று கூறப்பட்டிருப்பதைக் காணலாம். கொடு கொட்டியில் விலக்குறுப்புகளைப் புணர்த்து, கொட்டிச்சேதமாக ஆட வேண்டிய அவசியம் பற்றி அடுத்த பகுதிகளில் பின்னர் காணலாம்.

ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒவ்வொரு வகை ஆட்ட உறுப்புகள் உண்டு. அந்த மரபின் வழியேதான் ஆட்டங்கள் நிகழ்த்தப் பெறும். அவ்வாறு சமூக  காரணங்கள் தொடர்பான ஆட்டங்களுக்கு சில விலக்குகள் ஏற்பட்டு அவற்றையும் விலக்குறுப்புகளாகச் சேர்த்துக்கொண்டு ஆடப்படுவதுண்டு. சிலப்பதிகார உரையில் கூறப்பட்டபடி, விலக்குறுப்புகள் பதிநான்கு வகைப்படும். அவையாவன,

      பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம்  – ஆகும் [சிலபம்பு – ப 82]

இவ்விலக்குறுப்புகளுல் சேதம் என்பதும் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது. இச் சேதம் என்ற விலக்குறுப்பு எதற்கு என்ற விளக்கமும் கூறப்பட்டுள்ளது.

சேதம் என்பது ஆரியம் தமிழென இருவகைத்து

      ஆரியந்தமிழெனுஞ் சீர்நடமிரண்டினும்

      ஆதிக்கதையை அவற்றிற்கொப்பச் சேர்த்திடுவது சேதமாகும்.

அதாவது, ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து என்ற இருவகைக் கூத்துகளும் சீர் என்னும் தாளம் நடம் ஆகிய இரண்டிலும் பழைய கதையோடு அதற்கு ஒப்புமையாக உள்ள கதையை, அதாவது பழைய கதையோடு தற்போதுள்ள மன்னர்கள் அடைந்த வெற்றியை ஒப்பிட்டுப் பாடுவது சேதம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

      இந்த சேதம் என்பதுதான் நம் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட முக்கிய பொருள் குறித்த சொல்லாகும்.

சேதம் என்பது சேதித்தல், சொல்லுதல், தெரிவித்தல் என்று பொருள் என்று பார்த்தோம்.

சிலப்பதிகாரத்தின் உரையில் [ப-18] கூறியிருப்பதாவது, மேற்கூறிய 14 விலக்குறுப்புகளோடும், அதாவது “சேதம் முதலியனவற்றோடும் கதையோடும் பல கூத்துக் கூறுங்கால் உய்த்துணர்வில்லோர்க்குச் செவிச்சுவை பயக்குமாதலானும் ஈண்டு விரியாது விரித்தலைக் கருத்திற்று இவ்வுரையெனக் கொள்க” என்பதாகும்.

ஆதிக்கதையாவது சிவன் முப்புரத்தை வென்றது. அந்த வெற்றியோடு ஒப்பிட்டு ஆடும் ஆட்டம் அதுவென்று உணர்ந்து கொள்ள முடியாம உள்ள மக்களுக்கு, செவிகளால் கேட்டுப் புரிந்து கொள்ளும் பாட அவிநயத்தோடு கூடிய ஆட்டம்தான் சேதம் என்ற விலக்குறுப்போடு கூடியது என்கிறது. அதனால், சேதம் என்பது சேதித்தல், விளக்கிச் சொல்லுதல் என்பதாகும். ஆதிக்கதையைச் சேதித்திடுவது – என்பதால் கொட்டிச் சேதம் என்ற வஞ்சிக் காண்டம் நடுகற் காதையில் ஆடப்பட்ட நாட்டியம் நிருத்ய வகையைச் சார்ந்ததாகத் தெரிகிறது.

கொடுகொட்டி என்பது தாளத்திற்கு மட்டும் ஆடப்பட்ட ஆட்டம் என்பதால் அதினின்றும் வேறுபட்டு ஆட்டத்தின் உட்பொருளைப் பார்ப்போர் புரிந்துகொள்ளும்படி பாடலுடன் அவியநத்தைச் சேர்த்து ஆடிக்காட்டியிருப்பதால் கொடுகொட்டி என்ற ஆடலின் விலக்குறுப்பாகிய சேதம் என்பதுடன் ஆடப்பட்ட ஆடல் கொட்டிச் சேதம் என்பது. இந்தச் சேதம் என்பது ஆரியம், தமிழ் என்ற இருவகைக் கூத்துகளுக்கும் பொருந்துவதாகும்.

திருவாவடுதுறைக் கல்வெட்டில்..

திரிவாவடுதுரை கோமுக்தீசுவரர் கோயிலில் ஆரியக் கூத்து நடத்தப்பட்டிருக்கின்றது. முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி.994) ஆடற்கலைஞன் குமரன் ஸ்ரீகண்டன் என்பவன் இக்கோயிலில் ஆரியக் கூத்தாட வேண்டுமென்றி நிலக்கொடை அளிக்கப்பட்டது. இவன் ஏற்கனவே இக்கோயிலின் சாக்கைக் கூத்தாடுவதற்கு சாக்கைக் காணியாக நிலம் பெற்றிருக்கிறான். பின்னர் இவனே இக்கொயிலின் புரட்டாசி மாதத்தில் நடைபெறும்  திருவிழாவில் ஆரியக் கூத்து ஏழு அங்கங்கள் ஆடுவதற்கு நிருத்ய போகமாக மேற்கூறிய முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் நிலக்கொடை பெற்றிருக்கிறான்.  

அக்கோயிலில் உள்ள நாட்டிய அரங்கத்தில் இக்கூத்துகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அந்த நாட்டிய அரங்கம் சது சாலை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டிய அரங்கம் நாட்டிய சாத்திரம் கூறும் சதுச்ர அல்லது நாற்கர வடிவில் அமைந்த அரங்கமாக இருந்திருக்கும் என்பது நமக்குக் கிடைத்திறுக்கும் கூடுதல் தகவலாகும்.

முதலாம் இராஜராஜ சோழன் வடநாட்டில் ராட்டிர கூடர், கங்கர், கீழைச் சாளுக்கியர் போன்ற பல அரசுகளை வென்றபின், குறிப்பாக மேலைச் சாளுக்கியன் சத்யாஸ்ரயனை கி.பி.992-ல் வென்றபின் 994ல் திருவாவடுதுரையில் உள்ளா கோமுக்தீசுவரர்க் கோயிலில் திருவிழாவில் ஆடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டம்தான் ஆரியக்கூத்து. அதுபோல், முதலாம் குலோத்துங்கச் சோழன் கல்லிங்கத்துப் போரில் ஈடுபட்டு வெற்றிபெற்ற பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் மானம்பாடி என்ற ஊரிலுள்ள கைலாசநாதர்க் கோயிலில் தமிழ்க்கூத்து நடைபெற்ற செய்தியை அவ்வூர்க் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஏழுநாட்கள் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், தமிழ்க்கூத்து ஐந்து அங்கங்கள் ஆடவேண்டும் என்பது அரசனின் ஆணை. தமிழ்க்கூத்து ஆடிய கலைஞனின் பெயர் விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றன் என்ற விருதராஜன் பயங்கர ஆச்சாரியன் என்பது. இவனுக்குக் கூத்தக் காணியாக நிலம் அளிக்கப் பெற்றிருக்கிறது. “சேதம் என்பது ஆரியம் தமிழ் என இருவகைத்து” என்பதால் குலோத்துங்கன் மானம்பாடியில் நடத்திய தமிழ்க்கூத்திலும் சேதம் என்ற விலக்குறுப்பு இடம் பெற்றிருத்தல் வேண்டும். ஆடிய தமிழ்க்கூத்தின் ஐந்து அங்கங்களில் ஒன்று கொட்டிச் சேதமாக ஆடப்பட்டிருக்க வேண்டும்.

முதலாம் குலோத்துங்கனின் கலிங்கத்துப் போர் மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் போர். கலிங்கத்துப் பரணி என்ற இலக்கியம் கண்ட போர். இப்போரின் வெற்றியின் புகழும் பெருமையும் இறைவன் முன்னிலையில் மக்களின் பார்வையில் கொண்டாடப்படாமல் இருந்திருக்குமா! கொட்டிச் சேதமாக!!

சங்ககால சேரமன்னர்களாக இருந்தாலும் பிற்காலச் சோழமன்னர்களாக இருந்தாலும், அவர்கள் அடைந்த வெற்றிகள் வேறுவேறு. ஆனால் அவர்களின் வெற்றிகளை இறைவன் அடைந்த வெற்றிகளோடு இங்கு ஒப்பு நோக்குவது திரிபுரம் எரித்த வெற்றி ஒன்றுதான். இறைவன் வெற்றியோடு மன்னர்களின் வெற்றியை இணைத்துப் பாடி ஆடும்போது ஒவ்வொரு வெற்றிக்கும் போர்க்களம் மாறும். அதற்கேற்ப வர்ணித்துப் பொருள்பட ஆட வேண்டும்.

சீர், தூக்கு, பாணியுடன் இறைவன் வெற்றியைப் பாடி ஆடும் கொடுகொட்டியினின்றும் சற்று மாறுபட்டு உய்த்துணர முடியாதவர்குச் செவிச்சுவை பயக்குமாறு இந்த விலக்குறுப்போடு விரித்துக்கூறி விளங்க வைத்து ஆடுவது சேதம். ஆதிக்கதையாகிய திரிபுரம் எரித்த கதையோடு மன்னர்களின் வெற்றிகளை அவற்றிற்கு ஒப்பச் சேதித்திடுவது சேதம்.

விலக்குறுப்பாகச் சொல்லப்பட்ட சேதம், சிலப்பதிகார நூற் கட்டுரையில்

பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் (10)


அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும்

ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த

வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை

தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்

ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்

காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து  (ப-589)

என்று வரி, குரவை, சேதம் என்று வரிப்பாடல், குரவைப்பாடல் ஆகியவற்றிற்கு இணையாக சேதம் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

கானல் வரி, வேட்டுவவரி, குன்றக்குறவை, ஆய்ச்சியர்க்குரவை பாடல் பொருள் புரியும்படி ஆடுவது. அதைப்போலவே, சேதம் என்ற ஆட்டத்திலும் இறைவன் வெற்றியை மன்னர்களின் வெற்றியுடன் இணைத்துப் புருந்துகொள்ளும்படியான பாடல்களுடன் ஆடப்பட்ட ஆடலே சேதம். ஆகயால், வரிப்பாட்டும், குரவைப்பாட்டும், சேதப்பாட்டும் ஒரே வகையின.

 ஆக,

கொடுகொட்டியும் சாக்கைக் கூத்தும்  நிருத்த வகையின

கொட்டிச்சேதமும் ஆரியக்கூத்தும் நிருத்ய வகையின

ஆட்டத்தின் பொருள்பற்றிக் கூறாது சீர், தூக்கு, பாணி அதாவது ஓசை, நடை, தாளத்துடன் ஆடுவது நிருத்தம். ஆட்டத்தின் பொருள் விளங்கும்படி ஆடுவது நிருத்யம். பாடல்கள் நிருத்ததிற்கு வெண்டுறையாகவும், நிருத்யத்திற்கு செந்துறையாகவும் பாடப்பெறும்.

செந்துறை வண்ணம்: எந்தவகை யாப்பிலும் அமையலாம். மனிதர்களையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடுதல். தாளமில்லாமல் ஆளத்தியில் வைத்துப் பாடப்படும் பாட்டு.

வெண்டுரை வண்ணம்: தாளத்திற்கு அமந்த பாடலைக் குறிக்கும்.

செந்துறை நெறி என்றும் வெண்டுரை நெறி என்றும் பாடலைப் பாடும் நெறிகள் பண்டைக் கால வழக்கில் இருந்தன. இன்று ஓதுவார்கள் தேவாரப் பாடல்களை செந்துறையாகப் பாடுவதை சுத்தாங்கமாய்ப் பாடுதல் அல்லது விருத்தமாகப் பாடுதல் என்றும், வெண்டுரையாகப் பாடுவதை லயாங்கமாய்ப் பாடுதல் என்றும் கூறுகிறார்கள். ஒரே பாடலை முதலில் செந்துறையாகவும் பின்னர் வெண்டுரையாகவும் பாடுவதுண்டு. [தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி-2 பக்:347-348].

செந்நெறியிலே பாடுங்கால் – பொருளைப் புலப்படுத்துவதற்காக நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தியும், சொற்றொடர்களைப் பிரித்துக் காட்ட வேண்டிய இடங்களில் பிரித்துக் காட்டியும் பொருள் புலப்பாட்டிற்காக வலித்தும் மெலித்தும் நீட்டியும் குறுக்கியும் வல்யுறுத்தியும் பொருளோடு பொருத்தியும் பாடுவதற்கு செந்துறை நெறி பெரிதும் இடந்தரும். இதற்குத் தாளக்கட்டுப்பாடு இல்லை.

ஆனால் துள்ளல் ஓசையும் நடை ஒழுக்கமும் ஊட்டி நடனப் புரியச்செய்வது வெண்டுருறை நெறி. இதிலே தாளக் கட்டுப்பாடு மிக உண்டு. இங்கு வெண்மை என்பது தாளக்கட்டுப் பாட்டைக் குறிக்கிறது என்கிறார் அறிஞர் வீ.ப.க.சுந்தரம்.

ஆக, வெண்டுறையில் கொடுகொட்டி ஆட்டமும் செந்துறையில் கொட்டிச்சேதமும் அமைந்தன என்று தெரிகிறதல்லவா!

கொட்டிச் சேதம் பற்றி வீ.ப.க.சுந்தரம் கூறுகின்ற ஆய்வுத்தகவல்கலும் முக்கியமானவை. அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது,

      “இளங்கோவடிகள் சிவபெருமான் ஆடிய “கொடுகொட்டு என்னும் ஆட்டதைக் “கொட்டிச்சேதம்” என்றும் குறிப்பிடுகிறார் [சிலப் :28-75].

சேதம் என்பது கழிவு. கடினமான தாளக் கணக்கு முறையில் சிவனின் உடுக்கு ஒலித்தது. அதற்கு ஏற்பச் சிவன் ஆடினான். தாள முழக்கில் சேதம் என்பது மீதியாக நிற்கும் பகுதி. பொற்கொல்லர் நிறுதளவைக் கணக்கில் குறைவுபடும் தங்கத்தைச் “சேதாரம்” என்று இன்றும் குறிப்பிடுகின்றனர். இது ஒப்பு நோக்குதற்குறியது என்கிறார்.

கொட்டிசேதத்தின் கணக்கு விளக்கம்:

  1. தகதிமி + தகதிமி = 4 + 4 = 8
  2. தக + தக + திமி + திமி = 2 + 2 + 2 + 2 = 8

மேற்கண்ட இரண்டு பகுப்பு ஒரே அளவிலான ஒலி அளவுப் பகுப்பு முறையில் உள்ளதால் இது சேதாரம் இல்லாத பகுப்பு முறையாகும்

  • தகிட + தகிட + தக = 3 + 3 + 2 = 8

இந்த 8 எழுத்துச் சொற்கட்டில் மூன்று பகுப்புகள் உள்ளன. முதல் இரண்டு பகுப்புகள் ஒவ்வொன்றுக்கும் மூன்று எழுத்துக்கள். மூன்றாவது பகுப்பு 2 எழுத்துக்கள் பெற்றுக் குறைந்து உள்ளது. இப்பகுப்பு சேதப்பட்ட பகுப்பு – இந்த இரண்டு எழுத்துக்களே சேதம் எனப்படும்” என்கிறார் [தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 2 ப: 209]

இத்தகவலும் முக்கியத்துவம் வாய்ந்ததே.

கொட்டிச்சேத ஆட்டத்தில் இத்தகைய வாச்சியக் கூறுகளும் தாளமுழக்கில் ஆடப்பட்டு இந்த பின்ன வகைத் தாள வகைகளும் கொட்டிச் சேதத்தில் பின்னி எடுக்கப்பட்டிருக்கும் என்பது வெள்ளிடை மலை.

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*