
முன்னுரை
முந்து தமிழ் நூலாகிய தொல்காப்பியம் திணை வகுத்து அதற்கென முதல், கரு, உரிப்பொருள்களையும் வகுத்துள்ளது. அக்கருப்பொருள்களுள் பறை. யாழ், யாழிலிருந்து தோற்றம் பெறும் பண் ஆகிய மூன்றும் இசை குறித்தனவாக அமைந்துள்ளன. மக்களின் வாழ்வியல் தேவை நிறைவிற்குப் பிறகு தன்னைக் காத்துக்கொள்ள வழிபாட்டுச் சடங்குகளை நாடுகிறான். அச்சடங்குகளில் இசைக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றான். தான் வழிபாடு செய்கிறேன் என்பதைப் பிற இனக்குழுக்களுக்குத் தெரிவிக்கவே இசை முழக்கம் இருந்துள்ளது. ஒவ்வொரு நிலத்திற்கும் அந்த நிலத்தின் புழங்கு பொருட்களின் அடிப்படையில் இசைக்கருவிகள் யாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அல்லது அங்கு நிகழ்த்தப்படும் செயல்களின் அடிப்படையில் இசை வடிவங்கள் அமைந்துள்ளன என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகளின் வழி அறியமுடிகின்றது. சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து சிலப்பதிகாரத்திலும் இசையும் இசைக்கருவிகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதை நிறுவுவதாக இவ்வெழுத்துரை அமைந்துள்ளது.
குறிஞ்சித்திணை
சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தில் முதலாவதாக அமைந்துள்ள குன்றக்குரவையில் மலை நில மக்களாகி குறவர்கள் இறைவழிபாடு நிகழ்த்தும் போது பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் தொண்டப்பறை முதன்மைக் கருவியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குறவர் இனத்துச் சிறுவர்கள் தொண்டகச்சிறுபறையை முழக்கியுள்ளனர் (நற்றிணை104:,5). இரவில் ஊர்க்காவல் புரியும் கனவர்கள் தொண்டகப் பறையை முழக்கியுள்ளனர். மலைநிலத்துக்குரிய பறையாகத் தொண்டகப் பறை அமைந்துள்ளதை உரையாசிரியர்கள் கூற்று வழியாகவும் சங்கப்பனுவல்களின் சான்றுகள் வழியாகவும் அறிய முடிகின்றது. தொண்டகப்பறை என்பது மண் பானையின் வாயைத் தோலால் மூடி அதில் தாள முழக்குகளை இயக்குவது. இரவில் இக்கருவியை இயக்கும் போது அதன் ஒலி கும் கும் என ஆழமான ஒலியாக ஒலிக்கும். இரவில் அமைதியான நேரத்தில் இவ்வொலி தெளிவானதாகவும் அழுத்தமானதாகும் கேட்கும். குன்றக்குரவையில் மலைநிலத்துத் தலைமக்களாகிய குறவர்கள் தங்கள் இறை வழிபாட்டின்போது பல கருவிகளை இசைத்துள்ள பாங்கைக் காணமுடிகின்றது. மதுரையை எரித்த கண்ணகி சின மேலீட்டால் மலையில் வந்து அமர்ந்தாள். அவளைக் கண்ட மலைமக்கள் தாங்கள் வணங்கும் கொற்றவையே அங்கு அமர்ந்திருப்பதாக நினைத்து ஆடிப் பாடி வணங்கி மகிழ்ந்தனர். அவர்கள் தங்கள் நிலத்திற்கே உரிய பறைகளை முழக்கினர்.
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடியீரே
நிறங்கிள ரருவிப் பறம்பின் றாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைமின் கொடுமணி யியக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை யெடுமின் – சிலம்பு.24.11-18
தொண்டகப்பறை, சிறுபறை, கோடு, மணி என்னும் தோற்கருவிகள் மற்றும் காற்றுக்கருவி, கஞ்சக்கருவி ஆகியவற்றை இசைத்துக்கொண்டு குறிஞ்சிப் பண்ணையும் பாடி வழிபாடு நிகழ்த்தியுள்ள மரபார்ந்த செயல்பாட்டை அறியமுடிகின்றது.
முல்லைத்திணை
மதுரைக்காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையில் முல்லை நிலத்துத் தலை மக்களாகிய
ஆய்ச்சியர்கள் ஆநிரைகளை மேய்த்து அதன் பயனாக விளையும் பால், தயிர், வெண்ணெய் முதலானவற்றைத் தாமும் உட்கொண்டு தமக்கருகில் இருக்கும் பிறருக்கும் நல்கி வாழும் எளிமையான நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள். கவுந்தியடிகள் கோவலன் கண்ணகியை அடைக்கலமாக மாதரியிடம் ஒப்படைத்தார். கண்ணகியின் காற்சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புலம் பெயர்கிறான். அச்சமயம் ஆயர்களின் இடத்தில் பல்வேறு தீய நிமித்தங்கள் நிகழ்வதை மாதரி கண்ணுற்றாள். தன்னிடத்தில் அடைகலமாக வந்த கோவலனுக்கு ஏதேனும் தீமை விளைந்திருக்குமோ என அச்சப்படுகின்றாள். தான் கண்ட இந்தத் தீய நிகழ்வுகளைப் பிறரும் கண்டு அச்சப்படக்கூடாது என்று எண்ணி தன் மகள் ஐயை அழைத்து முன்னர் எருமன்றத்தில் கண்ணனும் பலராமனும் கோபியருடன் இணைந்து நிகழ்த்திய குரவைக் கூத்தை நிகழ்த்தச் சொல்கின்றாள். இக்கூத்தில் ஆடலுடன் பாடலும் முதன்மை பெறுகின்றது.
குரவை என்பது எழுவர் அல்லது ஒன்பதிமர் கைகோர்த்து ஆடும் ஓர் ஆடல். இங்கு ஆடலை நிகழ்த்துபவர்களே இசைச்சுரங்களாக அமைந்து பண்ணுப்பெயர்த்தல் என்னும் மகத்தான இசைத் தொழிலைப் புரிந்து ஆடுகின்றன. பண்ணுப்பெயர்த்தல் என்பது ஒரு பண்ணின் நின்ற சுரத்தை அடுத்த சுரத்தில் இடமாற்றி அமைத்துப் புதிய பண்ணைத் தோற்றுவிப்பதாகும். ஐந்திசைப் பண்ணாகிய முல்லைப்பண் முல்லை நிலத்திற்குரிய ஆயர்களின் திணைப் பண்ணாகும். குரலைக் குரலாகக் கொண்டு பண்ணுப்பெயர்த்தால் முல்லையும் (மோகனம்), துத்தத்தைக் குரலாகக் கொண்டு பண்ணுப்பெயர்த்தால் செந்துருத்தியும் (மத்தியமாவதி), கைக்கிளையைக் குரலாகக் கொண்டு பண்ணுப்பெயர்த்தால் இந்தளமும் (இந்தோளம்), இளியைக் குரலாகக் கொண்டு பண்ணுப்பெயர்த்தால் கொன்றையும் (சுத்தசாவேரி), விளரியைக் குரலாகக் கொண்டு பண்ணுப்பெயர்த்தால் விளரியும் (சுத்ததன்யாசி ) தோற்றம் பெறுகின்றன.
ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவ ரிளங் கோதையார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்றுபடு முறையா னிறுத்தி
இடைமுது மகளி னிவர்க்குப்
படைத்துக் கோட்பெய ரிடுவாள்
குடமுத லிடமுறை யாக்குர றுத்தம்
கைக்கிளை யுழையிளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர்ந்ந்
மாயவ னென்றா ளிளிதன்னை – யாய்மகள்
பின்னை யாமென்றாளோர் துத்தத்தை மற்றைய
முன்னையா மென்றாண் முறை – சிலம்பு.17:13
மேற்குத் திசையில் தொடங்கி குரலுக்கு இடப்பக்கம் துத்தம், துத்தத்திற்கு இடப்பக்கம் கைக்கிளை, கைக்கிளைக்கு இடப்பக்கம் உழை, இழைக்கு இடப்பக்கம் இளி, இளிக்கு இடப்பக்கம் விளரி, விளரிக்கு இடப்பக்கம் தாரம் என்று அச்சுரங்களாகியப் பெண்களை வரிசையாக நிற்க வைத்துப் பண்ணுப்பெயர்த்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
சங்க மரபை அடியொற்றி முல்லைத் திணைக்குரிய முல்லைப்பண்ணைத் தலைமைப் பண்ணாக அமைத்துப் பண்ணுப்பெயர்த்துப் பாடியுள்ள பாங்கை அறியமுடிகின்றது. மேலும் தொன்ம மாந்தரான நப்பின்னை முதலான மகளிர் இணைந்து ஆடிய ஆடல் என்பதால் குரவைக்கூத்து மிகவும் தொன்மை மிக்கது என்பதும் அறியப்படுகின்றது.
மருதத்திணை
மருதத் திணையில் இசைக்கப்பட்ட பறை கிணையாகும். கிணை என்னும் பெயருக்கு மருதப்பறை, கூத்தர் பறை எனப் பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சங்ககாலத்தில் பாணர்கள் இசைத்து வந்த ஒரு முகப்பறை கிணைப்பறை எனப்படும். கிணைத்தல் என்னும் தொழிற் பெயருக்குக் கிணையைக் கொட்டுதல் என்று பொருள் என்பதைப் பின்வரும் பாடலடிகள் நிறுவுகின்றன.
பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்
யாவரு மின்மையில் கிணைப்பத் தவாது – புறம்.375:11, 12
இப்பறையின் ஒலி கிண் கிண் என்று ஒலித்ததால் கிணை என்று அழைக்கப்பட்டுள்ளது.
அடியார்க்கு நல்லார் இப்பறையைக் கூத்தர் பறை என்றும் மருதப்பறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.மருத நிலத்தில் உழவுத்தொழில் நடக்கும் பொழுதும் பிற செயல்பாடுகளின் போதும் இக்கிணைப்பறை முழக்கப்பட்டுள்ளது. தென்கிணைப் பொருநர் இசைத்த கருவி முழவு என்பதையும் சிலப்பதிகாரம் பதிவுசெய்துள்ளது (சிலம்பு. அடியார்.உரை.மேற்.ப.266, 10:38,39).
மதுரை மாநகரில் காலை நேரத்தில் எழுந்த பல்வேறு ஒலிகளில் மள்ளர்கள் மகிழ்ச்சியாக வைகறைப் பொழுதில் இசைத்துள்ள கிணைப்பறையின் ஒலியும் எழுந்துள்ளது என்பதனைக்
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் – சிலம்பு.13:144
என்னும் பாடலடியால் அறியமுடிகின்றது. சங்க இலக்கிய மரபைப் பின்பற்றி உழவர்கள் தங்களின் தொழிலைத் தொடங்கும் நிலையில் இப்பறை இசைக்கப்பட்டுள்ளதைச் சிலப்பதிகாரமும் வழி மொழிந்துள்ளது.
முதல் முதலாக ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். இவ்வாறு பொன் ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி நல்ல விளைச்சல் காண வேண்டும் என்று வேண்டிப் பாடும் பாட்டு ஏர்மங்கலம் எனப்படும்.
வயல்களில் நெல் பயிர்கள் நன்றாக விளைந்த பின்பு அவற்றை அறுவடை செய்வர். அவற்றை வீட்டிற்குச் சுமந்து வந்து பரப்பி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெல்லையும் வைக்கோலையும் தனித்தனியே பிரிப்பர். அப்போது பாடும் பாட்டு முகவைப்பாட்டு எனப்படும்.
அத்தகைய ஏர்மங்கலப்பாட்டு மற்றும் முகவைப்பாடல் ஆகியவற்றைப் பாடும் போது கிணைப்பொருநர்கள் மிகுந்த மகிழ்வுடனும் பெருமிதத்துடனும் தங்கள் கிணைப்பறையை இசைக்கும் செய்தியைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.
ஏரொடு நின்றோ ரேர்மங் கலமும்
அரிந்துகால் குவித்தோ ரரிகடன் வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்
தெண்கிணைப் பொருநர் செருக்குட னெடுத்த
மண்கணை முழவின் மகிழிசை யோதையும்
பேர்யாற் றடைகரை நீரிற் கேட்டாங் – சிலம்பு.10:135-140
அடியார்க்கு நல்லார் இதனைக் களவழி வாழ்த்து என்பார் (சிலம்பு. அடியார்.உரை.மேற்.பா.10:38,39)
‘தண்பணைவய லுழவனைத்
தெண்கிணைவன் றிருந்துபுகழ் கிளர்ந்தன்று.
என்பதன் வழித் தெளிவாகிறது.
சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ள கிணைப்பறை மருத நிலத்துப் பறையாகவே இடம்பெற்றுள்ளதை அறியமுடிகின்றது
நெய்தல் திணை
நெய்தல் திணைக்குரியதாகச் சிலப்பதிகாரத்தில் அமைந்து வருவன வரிப்பாடல்கள் ஆகும். பல வகையான வரிப்பாடல்கள் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ளன.
வரி என்னும் வேர்ச்சொல் எழுத்து வடிவம், அடி, கப்பம் என்னும் பல்வேறு பொருண்மைகளில் பயன்படுத்தக் கூடிய ஒரு சொல்லாகும். பாடலைப் பொருத்தவரை இதன் பொருள் வருணிப்பது என்பதாகும். பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு செயலன்றி மயங்கிச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் முடிவும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வருவதுதான் தெய்வஞ்சுட்டிய மக்களைப் பழிச்சியும் வரும்’ என்று அரும்பதவுரையாசிரியர் குறிப்பிடுகின்றார் (அ.203)
எதனை வருணிக்கின்றோமோ அதன் பெயரைக்கொண்டு இவ்வரிப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன. ஆற்றை வருணிப்பது ஆற்றுவரி. வேட்டுவர்கள் பாடுவது வேட்டுவ வரி. இப்படிப் பாடப்பெறும் பொருண்மை அடிப்படையில் இவ்வரிப்பாடல்கள் அழைக்கப்படுகின்றன.
சிலப்பதிகார வரிப்பாடல்கள்
சிலப்பதிகாரத்தில் ஆற்று வரி, சார்த்துவரி, முகமில் வரி, கானல்வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்கு திணைநிலைவரி, சாயல்வரி, வேட்டுவவரி, ஊர்சூழ்வரி, கந்துகவரி ( மகளிர் பந்தாடும் போது பாடுதல்) என்னும் வரிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கானல் என்னும் சொல் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகிய நெய்தல் நிலத்தைச் சுட்டுகிறது. கானல் வரி என்னும் தலைப்பிற்குக் கழிக்கானலிடத்து பாடப்பட்ட வரிப்பாடல்கள் என்பது பொருள். கானல்வரிப்பாடல் என்பது கழிக்கானல் பொருண்மை பற்றிய வரிப்பாடல் என்பது பொருள். எனவே கானல் என்னும் சொல் இடத்தையும் பொருண்மையையும் சுட்டும் சொல்லாக இடம்பெற்றுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கானல் வரியில் ஆற்றைப் புகழ்ந்து பாடுவது ஆற்று வரிப் பாடல் ஆகும். காவிரி ஆற்றை வருணிப்பதால் இது ஆற்று வரி என்று அழைக்கப்படுகின்றது. திங்கள் மலை, மன்னுமாலை, உழவரோதை, மருங்கு வண்டு, பூவார் சோலை, வாழியவன்றன் ஆகிய ஆறு பாடல்கள் ஆற்றுவரிப் பாடல்களாகும். காவிரி என்னும் நங்கை தன் கணவனாகிய சோழ மன்னன் கங்கை என்னும் மங்கையைப் புணர்ந்தாலும் காவிரி நங்கை புலவாது கற்புடன் நிற்பாள் என்னும் பொருண்மையில் பாடியுள்ளார். காவிரி நங்கை கற்உடையவள் என்னும் கருத்தும் சோழன் கங்கை வரை சென்று படையெடுத்துச் சென்ற தகைமையும் ஒரு சேரப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் மும்மை நடை அமைந்து வந்தாலும் இன்றைக்கு இதனைச் சுத்த சாவேரி என்னும் இராகத்தில் தகிட தகதிமி என்னும் எழுமை நடையில் பாடி வருகின்றனர்.
சார்த்துவரி என்பது பாட்டுடைத் தலைவனின் பெயர், ஊர் ஆகியவற்றைப் புகழ்ந்து பாடுவதாகும். இது முகமுடை வரி, முகமில் வரி, படப்பு வரி என மூவகைப்படும்.
முகமில் வரி என்பது முகமொழிந்து ஏனைய வுறுப்புக்களான் வருவது என்பார் அரும்பதவுரையாசிரியர். (சிலம்பு.7:4) காவிரியை எதிர்முகமாக்கும் முறையில் பாடிய திங்கள் மாலை முதலான மூன்று பாடல்கள் முகமுடைய வரிப்பாடல்கள் ஆகும். அதாவது காவிரியை முன்னிலைப்படுத்திப் பாடியதால் அவை முகவரிப்பாடல்கள் என்று க.வெள்ளைவாரணனார் குறிப்பிடுகின்றார். (வீ.ப.கா.சுந்தரம், தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுதி 4, ப.40) எனவே அதற்கு எதிர்மறையானது முகமில் வரி ஆகும். துறைமேய வலம்புரி (ஆங்கன் தலைவியை வியத்தல்) அடையல் குருகே (காமமிக்க கழிபடர்கிளவி) நுளையர் விளரி, பிரிந்தோர் பரிந்துரைக்க, பையுணோய்க்கூற (மாலைப்பொழுது கண்டு தலைவி கூறியவை) இவை மூன்றும் முகமில் வரிப்பாடல்களாகும்.
முகம் என்பது பாடலின் முதல் பகுதி. முரி என்பது குற்றெழுத்தால் அமைந்து வருவது. இவை இரண்டும் இணைந்து வருவது நிலைவரி ஆகும்.
வரிப்பாடல்களில் முரிவரிப் பாடல் மிகவும் சிறப்புத்தன்மை வாய்ந்ததாகும். இதனுடைய யாப்பு அமைப்பால் சிறந்த தாளக்கட்டோடு அமைந்து பாடுவதற்குச் சுவை கூட்டுகின்றது. பொழிதரு நறு, திரைவிரி, வளைவளர் என்னும் மூன்று பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் கலிவிருத்தம் என்னும் யாப்பு வகையில் அமைந்துள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் 20 வண்ணங்களில் குறில் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், உருட்டு வண்ணம் ஆகிய வண்ண அமைப்போடு பொருத்திப் பார்க்கலாம்.
பொழிதரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
எழுதரு மின்னிடையே யெனையிடர் செய்தவையே என்னும் பாடல் அடிகள் தகதிமி தகதிமி தா என ஓர் ஒழுங்கமைவோடு அமைந்து வந்து தாளக்கட்டு நிரம்பத் திகழ்கிறது.
எடுத்த இயலும் இசையும் தம்மில்
முரித்துப் பாடுதல் முரியெனப் படுமே (சிலம்பு.7:14 அரும்.மேற்)
என்பார் அரும்பதவுரையாசிரியர். இயலாகிய சொற்கள் தம்மில் தாளத்தின் இடம் மாறுதல் வேண்டும். பண்ணும் தம்மில் மாறுதல் வேண்டும். இவ்வாறு முரித்துப் பாடுதலே முரிவரி என்னும் விளக்கத்தைப் பெற முடிகின்றது. சுத்ததன்யாசி என்னும் ஐந்திசைப் பண்ணில் அமைத்துப் பாடலாம்.
திணைநிலை வரி என்பது நெய்தல்திணையின் கருப்பொருளும் உரிப்பொருளும் கலந்து வர திணையின் சிறப்பைப் புகழ்ந்து பாடுவதாகும்.
மயங்கு திணை நிலை வரி என்பது அகப்பொருள் பாடல்களாகும். இவ்வகையில் ஆறு பாடல்கள் அமைந்துள்ளன.
சாயல் என்றால் இயல்பு என்று பொருள். சாயல் வரி என்பது இயல்பை எடுத்துக்கூறும் வரிப்பாடல் ஆகும். இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்; ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி இயற்பழிக்க தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம்” என்பார் அரும்பதவுரையாசிரியர் (7:43-45 ப.215). தோழி தலைவனுடைய சிறப்பினைச் சற்றுக் குறைத்துக்கூற தலைவியோ அவன் இயல்பைப் புகழ்ந்து கூறுவதாக அமைந்த அகத்திணைப் பற்றிய பாடலே சாயல் வரியாகும். கைதைவேலி, கானல் வேலி, அன்னந்துணையோ என்னும் மூன்று பாடல்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.
வரிப்பாடல்கள் இசைக்கூட்டிப் பாடப்படும் பாடல்கள் என்பதற்குச் சிலப்பதிகாரக் கானல்வரியில் சான்றுகள் அமைந்துள்ளன.
பாலைத்திணை
போர்மறவர்களும் ஆறலைக்கள்வர்களும் இசைக்கும் கருவிகள் பல சிலப்பதிகாரத்தில் பதிவுபெற்றுள்ளது. துடி ஓர் இருமுகத் தோற்கருவி ஆகும் துடி பாலை நிலத்திற்குரிய கருவியாகும். இது விரந்து முழக்கப்படும் கருவியாகும். அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் சொற்கட்டுக்களை அழுத்தி இசைப்பது சற்று கடினமான செயல்தான். இது சிறிய கருவி என்பதால் எடுத்துச் செல்வது எளிதானது. இதன் சொற்கட்டுகள் யாவும் கூடை அல்லது திரள் நடையில் உருட்டுச் சொற்களை உடையதாக இருக்கும். துடி வன்மைக்கருவியாகும். கருவி வகைகளில் துடி இடைக்கருவி ஆகும். மேலும் மத்திமக்கருவியாகவும் பஞ்ச மரபு உரைக்கின்றது.
தொல்காப்பியத்தின் செய்யுளியலில் பால நிலத்து மறவர்கள் தத்தம் துடியருடன் ஊர்ப்புறம் சூழ்ந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளது.
மறங்கடைக் கூட்டிய துடிநிலைசிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணைப் புறனே – தொல்.பொருள்.புறத்.நூ.4.
துடிபடுத்து வெட்சிமலைய – தொல்.பொருள்.செய்.நூ.62.
என்னும் நூற்பாக்களின் வழி துடி எயினர்களால் மட்டுமின்றி போர்க்களத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பதை அறியலாம். தங்களின் விருப்ப தெய்வமான குலதெய்வத்தைத் தாங்கள் நிகழ்த்தவிருக்கும் போரினை வெற்றிமுகமாகச் செய்ய வேண்டும் என்று வேண்டுதல் நிகழ்த்துவர். அச்சமயம் துடியை இயக்கிக் கொண்டு கொற்றவையை வழிபடுதலே துடிநிலை எனப்படும்.
வேட்டுவர்கள் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட்டனர். வேட்டுவர்கள் எயிற்றியிடம் தம் முன்னோர்களின் பெருமைகளை எடுத்துரைக் கின்றனர். வேட்டையில் கவர்ந்து வந்த ஆநிரைகள் கொல்லன், துடியர், யாழ்ப்பாணன் ஆகியோரது வீட்டு முற்றத்திலும் நிறைந்து இருந்தது. முன்னோர்கள் அத்தகைய செல்வ வளம் மிகுந்தவர்கள் என்பதோடு கவர்ந்து வந்த பொருள்கள் இசைக்கலைஞர்களுக்கும் பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளன என்பது அறியப்படுகின்றது. இதனை
இளமா வெயிற்றி யிவைகாணின் னையர்
தலைநாளை வேட்டகத்துத் தந்தநல் லானிரைகள்
கொல்லன் றுடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்த முன்றி னிறைந்தன 12:15:!-4
எனும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.
மறவர்கள் துடியுடன் சிறுபறை, வயிர் என்னும் சிறிய ஊதுகருவிகளோடு மிகுந்த அச்சம் தரும் ஒலியை எழுப்பிக்கொண்டு வருவர். நள்ளிருளிலே எதிர்ப்பட்ட விலங்கினங்களை வெல்லுகின்ற புலியைப் போன்றுள்ள அத்தகைய மறவர்கள் தங்கள் கழுத்தைத் தாங்களே அறுத்துக்கொண்டு குருதிப் பலியைக் குமரியாகிய உன் பாதத்தில் அளிப்பர் என்று மறவர்களின் தன்மையைப் பின்வரும் பாடலடிகள் வழி அறியலாம்.
துடியொடு சிறுபறை வயிரொடு துவை
வெடிபட வருபவ ரெயினர்க ளரையிருள்
அடும்புலி யானயவர் குமரி னடிதொடு
படுகட நிதுவுகு பலிமுக மடையே –சிலம்பு.12:20-22.
துடி எயினர்கள் என்னும் போர் மறவர்கள் பயன்படுத்தும் கருவியாகும். அதன் ஓசை மிகுந்த அச்சத்திற்குரியதாக இருக்கும் என்னும் செய்தியைச் சிலப்பதிகாரமும் பதிவு செய்துள்ளது.
துண்ணென் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் – சிலம்பு.12:2:1,2
‘துண்’ எனும் ஓசையுடன் முழங்குகின்ற துடியோடு தூங்குகின்ற ஊரினைக் கொள்ளையிடும் கண்ணோட்டம் இல்லாத எயினர் இடுகின்ற பலிக்கடனை உண்பாயாக என்று இப்பாடல் துடியின் ஓசை “துண்” என்று ஒலிக்கும் என்னும் ஒலிக்குறிப்பை எடுத்துரைக்கின்றது. மேலும் எயினர்கள் இரவில் ஊரைக் கொள்ளையிடும் பொழுது எழுப்பும் துடியின் ஒலி மிகுந்த அச்சத்தை விளைவிக்கும் என்பதையும் அறியமுடிகின்றது.
முடிவுரை
பல நுட்பங்களைத் தங்களின் வாழ்க்கை அனுபவத்தில் கண்டுணர்ந்து அதன் அடிப்படையில் வாழ்வியல் கூறுகளை முன்னோர்கள் வகுத்து வந்துள்ளனர். சூழ்நிலைக்கேற்பத் தங்களின் பழக்க வழக்கங்கள் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளை வகைமைபடுத்தி அதனைத் தொடர்ந்து வரும் மரபாகக் காலங்காலமாகக் கடைபிடித்து வந்துள்ளனர். பொழுதுபோக்குக் கூறுகளாக இம்மரபுகள் பின்னர் மாற்றப்பட்டுள்ளன. தங்களின் செயல்பாடுகளின் பொருண்மையைப் பிறர் அறிந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்பட்ட பழக்கங்கள் தேவை கருதி மரபான வழக்கங்களாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளன என்பதற்குச் சிலப்பதிகாரமும் நிலைத்த சான்றாக விளங்குகின்றது.
தமிழ் இலக்கிய மரபில் பாடுபொருளும் பாவகையும் ஒருங்கிணைந்து பனுவலின் கருத்தியலைத் தெளிவுற எடுத்தியம்புவதை அறியமுடிகிறது. தொடர்நிலைச் செய்யுளாக இருந்தாலும் தனிநிலைச் செய்யுளாக இருந்தாலும் கதைக்கூறன்களும் கதைக்களன்களும் ஒருங்கிணைந்து இலக்கியத்தைச் செம்மையாகப் பதிவுசெய்கின்றன. அதன் தொடர்ச்சியாகச் சிலப்பதிகாரத்திலும் ஐநிலக் கோட்பாட்டிலும் கைகோள் மரபிலும் பொருண்மையியலை வெளிப்படுத்தித் தமிழரின் பண்பாட்டு மரபை மேலோங்கச் செய்திருக்கிறது.
இசைக்கருவிகளை மென் கருவிகள், வன் கருவிகள் எனப் பகுக்கலாம். இரண்டுமே தொல் தமிழர் வாழ்வில் புழக்கத்திலிருந்தாலும் இனக்குழு, நிலைக்குழு மக்களாக மாறிய பொழுது தோற் கருவிகளே புழங்கு பொருள்களாகப் பயன்பாட்டிலிருந்தன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் வரிசைப்படி நிலங்களை நிலைப்படுத்தும் பொழுது இசைக் கருவிகளின் வளர்ச்சி நிலையையும் பயன் கொள்ளும் தேவைகளும் மாறி வருவதை அறியமுடிகின்றது. வழிபாட்டுச் சடங்குகளிலிருந்து தொழில் நிலைக்கு மேம்பட்ட நிலையினைத் தெளியலாம்.
இசைக்கருவிகள் முதன்மை பெற்றிருப்பது போலவே சிலப்பதிகாரத்தில் தொல் தமிழரின் தொல்லிசையின் தொடக்கத்தையும் செவ்வியல் இசை வடிவங்களின் உச்சத்தையும் இனம் காணமுடிகிறது. தமிழ்ச்சமூகத் தோற்றக் கலத்திலேயே தமிழிசையின் முழுமைபெற்ற தன்மையினை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வெழுத்துரையில் நெய்தல் திணையில் இசைப்பாடல்களின் பல்வேறு வடிவங்களையும் முல்லைத் திணையில் பண்ணுப்பெயர்த்தல் என்னும் இசைத்தொழில் நுட்பத்தின் பல்வேறு பரிமாண மாற்றங்களை உய்த்துணரும் வகையில் எளிய மக்களின் விளையாட்டுச் சூழலில் எடுத்தியம்பியுள்ள இசைத்திறன்களை அறியமுடிகின்றது.
இசை நுகர்விலும் தேர்விலும் வளர்ச்சிப் படிநிலையினை அறிகின்ற பொழுது திணை நிலை மக்களின் செவ்விய பயன்பாட்டு நாகரிகம் வளர்ச்சி எய்தியதைச் சிலப்பதிகாரப் பனுவல் வழித் தெளிவடைய முடியும்.
துணைநூற்பட்டியல்
இலங்கோவடிகள், 1892, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
இராச.கலைவாணி, சு.தமிழ்வேலு, 2005, சங்க இலக்கியத்தில் இசை, ஏழிசைப்பதிப்பகம், மயிலாடுதுறை.
இராச.கலைவாணி, 2014, தொல்காப்பியத்தில் இசை தொன்மையும் தொடர்ச்சியும், ஏழிசைப்பதிப்பகம், மயிலாடுதுறை.
இராச.கலைவாணி, சு.தமிழ்வேலு, 2021, சிலப்பதிகாரத்தில் ஆடலரங்க மரபுகள், ஏழிசைப்பதிப்பகம், மயிலாடுதுறை.
இராச.கலைவாணி, சு.தமிழ்வேலு, 2024, சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள், ஏழிசைப்பதிப்பகம், மயிலாடுதுறை.
முனைவர் இராச.கலைவாணி
இயக்குநர், ஏழிசை இசை ஆய்வகம்
மயிலாடுதுறை– 609 305
தமிழ்நாடு, இந்தியா.
Leave a Reply